ஞாயிறு, 17 நவம்பர், 2013

சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்: எரிந்த பெருங்கனவு





ஊகங்களும், மிகைப்படுத்தல்களும், அரசியல் சாய்வுகளும் நிரம்பிய கதைகளும் தகவல்களுமாய் ஈழத்தின் இறுதிப் போர் தமிழகத்தின் உரையாடல்களில் நீர்த்துப் போய் நெடுநாட்களாகிவிட்டது. ஆனால் ஈழக்கனவைச் சுமந்து திரிந்த உண்மையான இனஉணர்வாளர்கள் மற்றுமான சாமான்ய தமிழர்களின் பெரும்குழப்பத்தை தீர்க்கும்விதமானது இந்நூல்.

ஈழப் போரின் இறுதிநாட்களைப் பற்றிய உண்மையான சித்திரத்தை வெளிக்கொண்டுவரும் இந்நூல் பி.பி.சி. செய்தியாளரான ஃபிரான்சிஸ் ஹாரிசன் எனும் பெண்மணியால் எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்டுள்ளது என்பதைவிட தொகுக்கப்பட்டுள்ளது என்பதே பொருத்தமானது. நூலாசிரியரான ஹாரிசனின் ஆவணப்படுத்தியுள்ள இந்நூல் ஈழப்போரின் இறுதிநாட்களைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம். இறுதிப் போர்முடிந்து போதுமான கால அவகாசத்தின் பின் போரின் நேரடி சாட்சியங்களாக இருந்த ஊடகவியலாளர், தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர், புலிகளின் பகுதியில் இயங்கிய மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவர், மருத்துவ மனையில் சேவை புரிந்த  இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையின் கன்னிகாஸ்திரி, ஆசிரியையும் முன்னாள் போராளியின் மனைவியுமான பெண்மணி, போராளி ஒருவரின் விதவைத்தாய், போர்முனையில் பணியாற்றிய தன்னார்வத் தொண்டர், இறுதி நொடிவரை போரில் பங்கு பெற்றிருந்த போராளி, புலிகள் பகுதியில் வியாபாரம் செய்த கடைக்காரர், போராளிக் குடும்பத்திற்கு மருமகளாகச் சென்ற பெண் என பத்து பேரின் சாட்சியங்களைத் தொகுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது

  இந்த சாட்சியங்கள் அனைவரும் இலங்கையிலிருந்து வெளியேறி மேற்குநாடுகளின் நகரங்களில் தஞ்சம் புகுந்து, அமைதியான வாழ்க்கையை வாழ முயற்சித்து நாளும் போர்க்கால நினைவுகளால் துரத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். போரிலிருந்து மீண்டு எல்லாவற்றையும் நிதானமாக அசைபோடும் இடத்தை வந்தடைந்தவர்கள்.
40களில் இருந்த அந்த மருத்துவரின் அனுபவங்களும் சேவையும் ஒரு காவியம். நூலாசிரியர் சொல்வதைக் கேட்கலாம்அவரோடிருந்த மருத்துவர்கள், நர்சுகள் ஆகியோர் குறைந்தது 20,000 பேரையாவது காப்பாற்றியிருக்கிறார்கள் என்று கணக்கிடுகிறார்.  இருப்பினும் போரின் கடைசி நாளின்போது ஒரு மரத்தின் கீழ் தான் கைவிட்டுவந்த 150 நோயாளிகளைப்பற்றியே இன்னும் கவலைப்படுகிறார். அவருடைய சாரத்தை இழுத்துப் பிடித்த கைகளையும் தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சிய குரல்களையும் விட்டு, தாறுமாறாகப் பறக்கும் தோட்டாக்களிலிருந்து தப்பித்து இலங்கை ராணுவத்திடம் சரணடைய ஓடியதை மறக்க நினைக்கிறார்.

இப்போதும் இலங்கை ராணுவத்தால் தேடப்படுகிறவராக இருக்கிறார். “நான் இலங்கையைவிட்டு வெளியேறியபின்பு அவர்கள் என்னைத் தேடினார்கள். ஆனால அது மிகப் பிந்திவிட்டது. முதலில் புலித்தலைவர்களைத் தேடினார்கள். அடுத்ததாக சாட்சிகளாக நாங்கள் முக்கியமானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். (பக்.113)

கடைசியில் மக்களோடு சரணடைய வேண்டிய கட்டமும் வந்தது
அவ்விடத்தில் சோதனைக்காகப் பொதுமக்கள் வரிசையாக நிற்க வேண்டியிருந்த்து.மருத்துவர் நிரோனின் (கற்பனையான பெயர்) மருத்துவ உதவியாளன் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டான். மூன்று வருடங்களாக நூறாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்த அந்த உதவியாளன் எந்தத் தடயமுமின்றி காணாமல் போய்விட்டான். விசுவாசத்துடன் உதவிய ஒருவனையே தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற கவலை புலம்பெயர்ந்த மருத்துவர் நிரோனை இன்னும் வதைக்கிறது…’

அடுத்து நடந்த விசயங்கள் எல்லாம் மங்கலானவையாகவே ஜாபகத்தில் இருந்தன. மருத்துவர் நிரோனுக்கு அவை துன்பமானவை. அவர் உடல் முழுவதும் கையைவிட்டுத் தேடினார்கள். அவர் முதுகில் சட்டையுடன் ஒட்டியிருந்த எரியுண்ட காயங்களை ராணுவத்தினன் தொட்டபோது வேதனையில் துடித்தார். அதன்பிறகு அவருக்கு நினைவில் இருந்தது தண்ணீர்த் தாகம் மட்டுமே. அவருடைய வாய் தவிப்பால் வறண்டுவிட்டது. புழுக்கத்தால் வியர்த்தொழுகும் மத்தியான வெயிலில் மயங்கி விழப்போகிறோம் என்று அவர் நினைத்தார். தமிழர் ஒருவர் கொண்டு சென்ற ஒரு கொள்கலன் தண்ணீரில் ஒரு சொட்டு நீர் தரும்படி கேட்டார்.

என்னை அவருக்குத் தெரியாது. அவர் எனக்குத் தரவில்லை. நான் இருபத்தாறு முறை என் நோயாளிகளுக்கு ரத்தம் தானம் செய்திருக்கிறேன் என்பதை அந்தத் தருணத்தில் நினைத்துக் கொண்டேன். இப்போது எனக்கு ஒரு சொட்டு நீர் கிடைக்கவில்லை. நான் யாரென்று அவருக்குச் சொல்லவில்லை. கொஞ்சம் தண்ணீர் தரும்படி அவரைக் கெஞ்சினேன். அவர் மறுத்துவிட்டார். (பக்.126-127)

ஒவ்வொருவரின் அனுபவங்களும் நம்மை உலுக்கிவிடக்கூடியவை. அதுபோலவே போரை ஆரம்பிக்கத் தெரிந்த புலிகளால் போரை நிறுத்தத் தெரியாமல் போன யதார்த்தமும் நமக்கு அச்சூழலை விளங்கிக் கொள்ள ஏதுவாகிறது.

அவர்களுக்கு யதார்த்தம் பற்றிய உணர்வே இருக்கவில்லை. அவர்கள் பேசவே முன்வரவில்லை. நாங்கள் திகைத்துப்போய் நின்றோம்,” என்றார் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட நார்வே தூதர்களில் ஒருவர். பிரபாகரனின் சொற்களஞ்சியத்தில் சரணடைதல் என்னும் சொல்லே இல்லாமல் இருக்கலாம். எதிர்காலச் சந்ததியினர் தமிழரின் பிரிவினைக் கொள்கையை உயிருடன் வைத்திருப்பதற்காகத் தன் தியாகத்தால் உறுதி செய்தார் என்றும், அதுவே அவர் அவர்களுக்கு அளித்த கொடையும் வசீகரமும்  என்றும் சிலர் நம்புகிறார்கள். அவர் அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டுப்போனபோது சிலர் பிழையான ஆலோசனைகளும் பிழையான தகவல்களைக்கூட அளித்துள்ளார்கள் என்றும் சிலர் சொல்கின்றார்கள்.(பக்.102)

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூலை மொழி பெயர்த்திருப்பவர் என்.கே. மகாலிங்கம். ஏற்கனவே ‘சிதைவுகள்’ உள்ளிட்ட முக்கிய மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளவர். இந்நூலின் மொழிபெயர்ப்பு மிகவும் உயிரூட்டமானது. அதற்கு தற்போது கனடாவில் வசித்துவரும் மொழிபெயர்ப்பாளர் ‘மகாலிங்கம்’ ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

காலச்சுவடு வெளியீடாக 2012இல் வெளிவந்துள்ள இந்நூலின் அடுத்தபதிப்பு வந்துவிட்டதாகவும் கேள்வி.

திங்கள், 4 நவம்பர், 2013

கிராவிட்டி (GRAVITY) : இரண்டு பாத்திரங்கள் – நான்கு குரல்கள்… ஒரு விண்வெளிக் காவியம்


 

அறிவியல் புனைகதை மற்றும் விண்வெளியில் நடக்கும் கதைகளென்றாலே எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அந்தத் தயக்கத்தோடே தியேட்டருக்குப் போனேன். பெங்களூர் பிவிஆர் ஐ மாக்ஸில் 600ரூபாய் கட்டணம் கொடுத்த போது ஒவ்வாமை இன்னும் அதிகமானது. படம் முடிந்தபோது 'நான் மட்டும் பழைய காலத்து ஊதாரி மன்னர்களுள் ஒருவனாக இருந்தால், சுஜாதா சொன்ன மாதிரி என் ராஜ்ஜியத்தில் பாதியை இயக்குநருக்கு கொடுக்கத் தயங்கமாட்டேன் என்று தோன்றியது.

இரண்டு பாத்திரங்களையும் நான்கு குரல்களையும் கொண்டு வெண்திரையில் எழுதப்பட்ட விண்வெளிக்காவியம் கிராவிட்டி.

 இது அறிவியல் புனைகதை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கற்பனையை கன்னாபின்னாவென்று ஓடவிட்டு நம்மைப்போல் எளிமையான ஜீவராசிகளின் கற்பனை வறட்சியை பறைசாற்றும் முயற்சிகள் இல்லை. பயணம் செல்லும் விண்வெளிக் கப்பலில் பழுது ஏற்படுகிறது. கப்பலில் செல்லும் நால்வரில் ஒருவர் ரயான் ஸ்டோன் (சான்ட்ரா புல்லக்) மருத்துவ பொறியாளர். அவருக்கு இது முதல் விண்வெளிப் பயணம். இன்னொருவர் மாட் க்வாஸ்கி (ஜார்ஜ் க்ளூனி) விண்ணியலாளர். விண்கலத்தின் கமாண்டர். இந்தப்பயணத்துடன் ஓய்வு பெறும் உற்சாகத்தில் இருப்பவர். ரஷ்ய விண்கலம் ஒன்று (ஹாலிவுட்டுக்கு இன்னும் வில்லன் ரஷ்யாதான்) பழுதான சாட்லைட் ஒன்றுடன் மோதியதன் தொடர் விளைவாக விண்வெளியின் விண்கலக் கழிவுகள் மோதக் கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து தொடர்புகள் அறுந்துபோக, விண்கலக் கழிவுகளால் கப்பல் பெருத்த சேதமடைகிறது. கப்பலிலிருந்த  மற்றும் இருவர் இறந்து விடுகிறார்கள். இப்போது ரயானும் க்வாஸ்கியும் பேரண்டப் பெருவெளியில் தனித்து விடப்படுகிறார்கள். ஒருவர் மட்டுமே தப்பமுடியும் என்ற சூழலில் க்வாஸ்கி ரயானிடம் விண்வெளியில் விடைபெற்று பேரண்டத்தில் கலந்துவிடுகிறார். ரயான் பூமிக்குத்திரும்பினாரா? என்பதுதான் மீதமுள்ள படம்.


3டி தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை இந்தப் படத்தில் உணரமுடிந்தது.  ஈர்ப்பு விசையற்ற வெளியில் மிதந்தலையும் உடல்கள், பொருட்களோடு நாமும் மிதந்தலையத் தொடங்குகிறோம். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பதும், செய்தித் தாள்களில் ஒரு பத்தியில் படித்த விண்கலங்களின் பிரம்மாண்டத்தையும் பேரண்டத்தில் மனிதன் செய்துகொண்டிருக்கும் பரிசோதனைகளின் வீச்சையும் முப்பரிமாணத்தில் திரையில் பார்ப்பது பரவசமான அனுபவம். அவதார் ‘கேமரூன்’ சொன்னமாதிரி ‘விண்வெளியில் கதை நிகழும் படங்களில் இது ஒரு மைல்கல்’ என்ற வார்த்தை மிகையானதல்ல.

படத்தின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் ‘ஒலி வடிவமைப்பு’ (sound design). க்வாஸ்கி விண்வெளியில் உலாவிக்கொண்டே பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களோடு பேசும் உரையாடலும் (பெரும்பாலும் புரியாவிட்டாலும்) வானொலியில் பாடல்கள் கேட்பதும் அற்புதம். விண்வெளியின் வேறுபட்ட சூழலில் பெரும் பகுதி அமைதியும் மிக அமைதியுமாகக் கழிகிறது. இசை மிகச் சொற்பம். (விண்வெளியில் ஓசை கேட்காது என்பதால் பாத்திரங்களின் முகக் கவசத்திற்குள் இசை ஒலிப்பதாகக் கருதவேண்டும்)




படத்தின் இறுதியில் இரண்டு/ மூன்று நிமிடங்கள் மட்டுமே முழு உடலைக்காண்பிக்கும் சான்ராபுல்லக் படத்தின் பெரும்பகுதி கவசத்திற்குள் முகத்தையும் சிறிய அளவில் விண்கலத்திற்குள் சாதாரண உடையில் மிதக்கிறார். இதற்காக ஆறுமாதம் நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்.

50களின் தொடக்கத்திலிருக்கும் அல்போன்சோ குவாரான் (Alfonso Cuarón) எனும் மெக்ஸிக்க இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிபோட்டர் உட்பட சில படங்களையே இயக்கியிருப்பவர்.  ஜோனஸ் குவாரான் (Jonás) என்பவரோடு இணைந்து இந்தத் திரைக்கதையை எழுதியுளார். இருவரும் தந்தையும் புதல்வரும் என்பது கூடுதல் விசித்திரம்.

Alfonso Cuarón

இந்தப்  படத்தை 3டியில் மட்டுமே பாருங்கள். ஐ மாக்ஸ் 3டியில் பார்ப்பவர்கள் பாக்யவான்கள். 2013ஆம் ஆண்டின் தலைசிறந்த படம்.   

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

மஞ்ஞாடிக்குரு (Manjadikuru): அதிர்ஷ்டக்கார சிவப்பு விதைகள்





தெரிவுசெய்யப்படும் விதைகளைவிட உதாசீனம் செய்யப்படும் குறையுள்ள விதைகளே மண்ணில் விழுந்து புதைந்து செடியாய் முளைத்து எழும். அவைகளே அதிர்ஷ்டக்கார விதைகள் என்பதே இப்படத்தின் ஊடிழை.

 

உள்ளூரில் சினிமா கற்றுக்கொண்ட இளைர்கள் ஒருவகையான வீரிய இன (hybrid) திரைக்கதைகளை உலவவிட்டுக் கலக்கிக் கொண்டிருக்கையில் லண்டன் திரைப்படக் கல்லூரியில் படித்த அஞ்சலி மேனன் கேரளத்தின் ஆன்மாவை தொட்டுவிடும் அருமையான அலட்டலில்லாத ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் குறிப்பிடுவதுபோல் இப்படம்வேர்களைத் நோக்கித் திரும்புகிற ஒரு பயணம்தான்

ஒரு புகைப்படத்தால் தூண்டப்பட்டு இந்தத் திரைக்கதையை எழுதியதாகக் கூறும் அஞ்சலி..இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர்/ மளையாளி.

 ஒரு மரணச் சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வழக்கமான அவலச்சுவை வழிந்தோடும் ஒரு சூழலில் மகிழ்ச்சியான முகபாவங்களோடு நின்றிருந்த சிறுவர்குழாமின் முரண்பட்ட இருப்பே இந்த்த் திரைக்கதைக்கான உந்துதலாக அமைந்தாம். ஒரு பெரிய குடும்பத்தின் இறப்புச் சடங்கிற்காக ஒன்று கூடும் உறவினரிடையே இழப்பின் துயரத்தைச் சுமந்து நிற்கும் பெரியவர்களிடையே, எதிர்பாராமல் ஒன்று சேரும் சிறுவர்கள் புதிதாகக் கிடைத்த நட்பின் மகிழ்ச்சியில் திளைக்கும் எதிரும் புதிருமான உணர்வுகளின் ஊடே விரியும் எளிமையான கதை.


அந்நிய மண்ணில் வாழ நேர்ந்துவிடும் ஒருவனுக்கு வேறுபட்ட பல இடங்கள் இருந்தாலும் எதையுமே சொந்தம் கொண்டாட முடியாத இயலாமை மேலோங்கும்போது தன் பூர்வீக மண்ணின் வேர்களைத் தேடி ஓட வேண்டியவனாகிறான். என்னுடைய நாயகனான விக்கியும் அதைத்தான் செய்கிறான் என்கிறார். 
 
இந்தத் திரைக்கதையை எழுதும் போதுதான் மளையாளத்தைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்ட அஜ்சலி, ஆங்கிலத்தில் சிந்தித்து மளையாளத்தில் எழுதுவது பெரும் அவஸ்த்தையாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஒரு பெரிய குடும்பத்தின் தலைவர் இறந்துவிடுகிறார். மத்திய கிழக்கிலிருந்து புருஷன் மற்றும் கதை நாயகனா சிறுவன் விக்கியுடன் வரும் மகள் ஒருத்தி. லண்டனிலிருந்து நிறைமாத கர்ப்பிணியாய் இன்னொரு மகள். டெல்லியில் அரசு உயரதிகாரியான புருஷன் மற்றும் ஐ..எஸ்., தேர்வுக்குத் தயாராவது கெட்டுவிட்டதாக குறைபட்டுக்கொண்டிருக்கும் மகளோடு வந்திருக்கும் இன்னொரு மகள், உள்ளூரில் கஷ்ட ஜீவனம் செய்து கொண்டிருக்கும் கைக் குழந்தைக்குத் தாயான இன்னொரு மகள், தன் இருபதுகளில் நகஸலைட்டாக வீட்டைவிட்டு ஓடிப்போய் காவிவேட்டியோடு திரும்பி வந்து யாரிடமும் ஒட்ட முடியாமல் நிற்கும் மூத்தமகன். உள்ளூரில் தந்தையோடு இருந்து எல்லாச்சுமைகளையும் தான் சுமந்து தீர்த்ததான எரிச்சலில் கடனுக்கு வந்திருக்கும் உடன்பிறப்புக்களை சபித்தவாறு இருக்கும் இன்னொரு மகன். அவரவர் வாழ்வின் அவசரங்களுக்கிடையே உழன்று கொண்டிருக்கும் அவர்களை அங்கே இருத்தி வைத்திருப்பது 16ஆம் நாள் சடங்கு முடிந்தவுடன் வாசிக்கப்படவிருக்கும் தந்தையின் உயில். உயிலில் யாருக்கு என்ன? என்பது பற்றிய ஆர்வமே மேலோங்கியிருக்கும் அந்த 16 நாட்களும், துபாயிலிருந்து வந்திருக்கும் விக்கி எனும் சிறுவனின் நினைவலைகளாக விவரிக்கப்படுகிறது.


பொறாமையும் பாவனைகளும் நிரம்பிய பெரியவர்களின் உலகத்திலிந்து விலகி சிறுவனான விக்கி அவன் மாமாவின் குழந்தைகளுடன் கொள்ளும் புதிய நட்பும் அவர்களைவிட சற்றுப் பெரியவளான ரோஜா என்ற வேலைக்காரத் தமிழ் சிறுமியுடனான ஸ்நேகமும் அவனின் தற்காலிக உலகங்களாகின்றன. கறுப்பி என்றும் தமிழச்சி என்றும் அழுக்கானவள் என்றும் விளிக்கப்படும் ரோஜாவை அவளின் துயரங்களிலிருந்து விடுவித்துவிட முடியுமென்று நம்பும் விக்கி அவளை ஊருக்கு அனுப்பிவிட முயன்று, கன்றிப்போன காயங்களுடனும் கண்ணீருடனும் ரோஜா திரும்பவும் அங்கேயே கொண்டுவந்து விடப்படுவதை பார்த்தபடியே துபாய்க்குக் கிளம்ப வேண்டியதாகிறது.


ஒரே சொத்தான அந்த பிரம்மாண்டமான வீட்டை பாட்டியின்  ஜீவபரியந்தம் அவரின் பெயருக்கு எழுதிவிடும் தாத்தாவின் உயில் எல்லோரையும் அவசரமாக ஊருக்கு அனுப்பிவிடுகிறது. தாத்தாவின் மறைவுக்கப்புறம் 20 வருடங்கள் உயிர்வாழ்ந்த பாட்டியைப் பராமரித்துவந்த ரோஜாவை பாட்டியுடன் புகைப்படமெடுக்கும் இருபதுகளில் இருக்கும் இளைனான விக்கியின் குரலிலேயே மொத்தக் கதையும் விவரிக்கப் படுகிறது.


படத்தில் தாத்தாவாக வரும் திலகன் பிணமாகவும் பின் புகைப்படமாகவும் இரண்டொரு ஷாட்களில் மட்டுமே தென்படுபவராகவும் மட்டுமே வருகிறார். வளர்ந்த ரோஜாவாக வரும் பத்மப்ரியா கடைசி ஷாட்டில் பாட்டியின் தோளை கட்டிக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பவராக மட்டுமே வருகிறார். பெரிய வேடிக்கை, நாயகனான பிரிதிவிராஜின் குரலிலேயே மொத்தக் கதையும் சொல்லப்பட்டாலும் கடைசிக் காட்சியிலே சில நிமிடங்களே வந்து போகிறார் அவர்.இது மளையாளத்தில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன்.

கதை கூறுவதற்காக எந்தப் புதிய உத்திகளையும் பரிசோதிக்காமல் நேர்கோட்டில் இயல்பாய் விவரிக்கப்படும் இப்படத்தின் இயக்குநர் எதிர்காலத்தில் மிகவும் காத்திறமான படைப்புகளை இந்திய சினிமாவிற்குக் கொடுப்பார் என்று நம்ப இடமிருக்கிறது. தொழில்நுட்ப விசயங்களிலும் ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு இசை போன்றவற்றிலும் தென்படும் முதிர்ச்சி இந்திய இயக்குநர்களிடையே அரிதான ஒன்று. குறிப்பாக நவீன சத்தங்களின், கருவிகளின் ஒத்தாசையில்லாமல் இந்தியக் கருவிகளைக் கொண்டே அற்புதமான பின்னனி இசையை வடிவமைத்திருக்கிறார்.

ஞ்சலி மேனன்
இவர்தான் உஸ்தாத் ஓட்டல்படத்தின் திரைக்கதையாசிரியர். இரண்டு படங்களிலும் தமிழர்களைப் பெருமைப்படுத்தியிருப்பது தற்செயல்தானா என்று தெரியவில்லை. உஸ்தாத் ஓட்டலில் நாயகனை அவன் தாத்தா வாழ்வின் அர்த்தத்தை நீ அறிந்துகொள்ள வேண்டுமானால் மதுரைக்குப் போய் என் நண்பரிடம் இந்தப்பணத்தைக் கொடுத்துவிட்டுவாஎன்று அனுப்பி வைப்பார். மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். (அஜ்சலி மேன்னுக்குத் தெரிந்தது மதுரைக்கார அரிவாள் இயக்குநர்களுக்குப் பொருட்டாகத் தெரியாத்தில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்) இந்தப் படத்திலும் பழி சுமத்தப்படும் வேலைக்காரத் தமிழ்ச் சிறுமி ரோஜாதான் பாட்டியின் தள்ளாத வயதில் கூட இருப்பவள். சிறுமி அருமையாக நடித்திருந்தாள்.
 
கேரள அரசின் விருதுகள் உட்பட பல சர்வதேச விருதுகளை வென்ற ‘ஞ்ஞாடிக்குரு’ வேர்களை அரிக்கத் தொடங்கியிருக்கும் நவீன வாழ்க்கையின் ஒரு துளி.  

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.