வியாழன், 4 ஏப்ரல், 2019

சூப்பர் டீலக்ஸ் - விமர்சனம்

Image may contain: 6 people, text













                   ஹைப்பர் லிங்க் சினிமாக்கள் எப்போதுமே எனக்கு விருப்பமானவை.
வன்முறை, குற்றம், பாலியல் ஒழுங்கு மீறல்கள், பெருநகரப்பண்பாட்டில் அடித்தள மக்களின் வாழ்வியல் இவற்றினூடாக இருத்தலின் அர்த்தமின்மையையும் உலகம் வலியுறுத்திவரும் அறம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்ப கூடியவை இந்த ஹைப்பர் லிங்க் படங்கள் என்பேன். பகடியும் கேளிக்கையுமாக நகரும் இப்படங்கள் இன்னொரு அடுக்கில் ஆழமான கேள்விகளை எழுப்பக்கூடியவை. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு பார்வையாளனைச் சஞ்சலப் படுத்துபவை. Plup Fiction, Magnolia, Traffic, 21 Grams, Amores Perros, City of God, Babel ஆகியவை இந்த வகைமையில் உச்சத்தைத் தொட்டவை. 21 grams, Amores Perros, Babel ஆகிய மூன்று படங்களையும் இயக்கிய அலக்சாந்த்ரோ கொன்சாலஸ் இந்த வகையான படங்களை இயக்குவதில் ஒரு மேதை.
                 குமாரராஜா அப்படி ஒரு ஹைப்பர் லிங்க் சினிமாவை முயற்சித்திருக்கிறார். ஆரண்யகாண்டம் இப்போது வரைக்கும் எனக்குப் பிடித்தமான படமாகவே இருக்கிறது. 8 வருடங்கள் கழித்து கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்ததாலோ என்னவோ படம் கூடி வந்தமாதிரி தெரியவில்லை.
                 ஆரண்யகாண்டத்தில் ' எது தேவையோ அதுவே அறம்' என்பது போன்ற வாசகத்தோடு படத்தைத் தொடங்கியவர் குமாரராஜா. ' தேசத்தின் மேல் இருந்தால் அது பக்தி, மொழியின் மேல் இருந்தால் அது பற்று, ஆனால் சாதியின் மேல் இருந்தால் மட்டும் அது வெறியா?' என்று சூப்பர் டீலக்ஸில் ஒரு உரையாடல் வருகிறது. இன்னொரு இடத்தில் நீலப்படத்தில் தோன்றியிருந்த அம்மாவை பார்த்து ' சினிமால சான்ஸ் தாரேன்னு யாரும் ஒன்ன அப்டி நடிக்க வைச்சுட்டாங்களாம்மா' என்று கேட்கும் பையனிடம் அம்மா ' நான் தெரிஞ்சுதான் நடிச்சேன். அந்த மாதிரி படத்த லச்சம் பேரு பாக்குறாங்கன்னா அதுல நடிக்க நாலுபேர் இருக்கத்தான் செய்வாங்க. அவங்கள சொல்லாம என்ன மட்டும் எப்படி சொல்லலாம்' என்கிறாள். இந்தமாதிரி உரையாடல்களைவைப்பதற்கு கலகத் தன்மையும், புத்திசாலித்தனமும் கொஞ்சம் அரைவேக்காட்டுத்தனமும் தேவைப்படுகிறது. 
                  பாடல்கள் இல்லாமல் இருப்பது ஆசுவாசமாக இருக்கிறது. இசையும் அளந்துதான். பழைய பாடல்களை சில இடங்களில் அட்டகாசமாய் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் அதிகம். 
                  விஜய் சேதுபதி ஒப்பனையைத் தவிர பிரத்தியேக்மாக ஒன்றும் நடித்துவிடவில்லை. அரவாணிகளுக்கான நளினம், அங்க அசைவுகளிலோ குரலிலோ கூடத் துலக்கமாக வெளிப்பட்ட மாதிரி தெரியவில்லை. விஜய் சேதுபதி என்ன செய்தாலும் அதைக் கொண்டாடுகிற மனநிலையில் ரசிகர்களும் ஊடகங்களும் இருக்கிறார்கள். எனக்கென்னவோ சேதுபதி ஒரே மாதிரியாகவே நடித்து வருகிறார். அதாவது அவருடைய சுயமான உடல் மொழி, பேச்சு மொழி மற்றும் பாணி. . அவருடைய தனிப்பட்ட நல்லியல்புகளை நடிப்பின்மேல் ஏற்றிவிடுகிறார்கள் போலத் தெரிகிறது.
                  மிஷ்கின் பாத்திரம் தமிழ் சினிமாவில் புதுசு. ஆனால் மாபெரும் சொதப்பல். தமிழ் கிறித்தவ விசுவாசிகளுக்கென்றே ஒரு தனித்த மொழிநடை, மாடுலேசன் இருக்கிறது. அதை கவனமாகப் பயன்படுத்தியிருந்தால் பிரமாதப்படுத்தியிருக்கலாம். சபீபகாலமாக தமிழ்க்கிறித்தவர்களிடையே பெருகிவரும் மூட பக்தியை பகடி செய்தமைக்கு என் தனிப்பட்ட நன்றி. ஆனால் அதைச் சரிவரச் செய்யாமல் விட்டதை ஒரு கிறித்தவனாகக் கண்டிக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
                   தாய்மொழி பேசி நடிப்பதன் அவசியத்தை பகத்பாசில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார். சில நல்ல தருணங்கள் அவரின் தமிழால் மதிப்பிழந்துவிடுகின்றன. பகத்பாசிலேதான் இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டுமா? சில சுவாரஸ்யமான தருணங்களும் பல ஆயாசங்களும் கலந்து படம் முடிந்து வெளியே வரும்போது, படம் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்று தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
                  நின்று நிதானித்துப் பார்த்தால் தமிழின் புதிய புதுவகை (hybrid ) சினிமாக்களில் சூப்பர் டீலக்ஸுக்கு இடம் கொடுத்தே ஆகவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.