செவ்வாய், 9 ஜூலை, 2019

When They See Us...



நெட்ஃபிளிக்ஸ்க் வெளியிட்டுள்ள 4 பாகங்களுடைய குறுந்தொடர்தான் ‘When they see us’. மினி வெப் சீரிஸ். 5 மணி நேரத்திற்கும் மேல் நீள்கிறது. நியூயார்க்கில் 1989இல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர். நியூயார் நகரின் நட்ட நடுவில் இருக்கும் சென்ட்ரல் பார்க் 800 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட ஒரு பொதுப்பூங்கா. ஒரு நாள் இரவு 28 வயது இளம் பெண்ணொருத்தி ஜாகிங் சென்றவள் பலாத்காரம் செய்யப்பட்டு குற்றுயிராக மீட்கப்படுகிறாள். அந்த நேரத்தில் பூங்காவில் தென்பட்டதாக 5 கறுப்பின இளைஞர்கள், இளைஞர்கள் என்று சொல்ல முடியாத 13 லிருந்து 16 வயதுக்குள்ளான சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பரபரப்பான விசாரனைகளுக்குப்பின் சிறுவர்களிடமிருந்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன. நேரடி சாட்சியங்கள், டி.என்.. பொருத்தம் எதுவும் ஒத்துப் போகவில்லை என்பதைவிட அவர்கள் செய்திருப்பார்கள் என்பதற்கு அவர்களின் நிறத்தைவிட வேறென்ன சாட்சியம் வேண்டிக்கிடக்கிறது. 5 முதல் 13 ஆண்டுகள் தண்டணை வழங்கப்படுகிறது.


சிறைக் கொடுமைகள், சக கைதிகளின் வெறுப்பு, குடும்பத்தாரின் அலைகழிவுகள் எல்லாவற்றையும் தாண்டி ஒருவரைத்தவிர மற்ற நால்வரும் விடுதலை பெற்று வெளியே வந்துவிடுகின்றனர். இப்போது சென்றல் பார்க்கில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவன் நான் தான் என்று 2012இல் வெள்ளையன் ஒருவன் சரணடைகிறான். டி.என். . பொருத்தங்களுக்குப்பின் குற்றவாளி அவன்தான் என்பது ஊர்ஜிதமாகிறது. வழக்கு நடக்கும் காலத்தில் பொது சமூகத்தில் கருப்பினத்தவருக்கு எதிரான வெறுப்பு எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இப்போதைய அதிபர் ட்றம்ப் அப்போது செய்தித்தாள்களில் சொந்தச் செலவில் 'மரணதண்டனையைத் திரும்பக் கொண்டுவரவேண்டும்' என்று விளம்பரம் செய்த விசயங்களும் படத்தில் வருகின்றன.



இப்படியொரு உணர்ச்சிகரமான திரைப்படத்தைப் பார்த்து நாளாகிறது. இதை இயக்கிய Ava DuVernay ஒரு கறுப்பின பெண்மணி. வெள்ளையினத்தவரின் மனசாட்சியை உலுக்கிய இந்தக் குறுந்தொடர் 190 நாடுகளில் வெளியிடப்பட்டு முதல்வாரத்திலேயே பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் செயல் தயாரிப்பாளர் ஓப்ரா வின்ஃபிரே, படத்தின் இயக்குநர், நடிகர்கள், தண்டனை பெற்ற வெவ்வேறு நகரங்களில் வசித்த அந்த ஐவர் ஆகியோரை உள்ளடக்கி நடத்திய ஒரு கலந்துரையாடலும் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது. தொடரைப் பார்த்த கையோடு அதையும் பார்த்துவிடுவது அவசியம்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

வகுப்பறைக்கு வெளியே -1

  ̀மாடசாமி என்றொரு மாணவர். காலை 8 மணி வகுப்பிலேயே அரைத்தூக்கத்தில் இருப்பார். சில சயங்களில் கோபமாகவும் சில சமயங்களில் கிண்டலாகவும் வினையாற்றி ஓய்ந்து விட்டேன். மிக அமைதியானவர். ஒருநாள் காலை 4 மணி. புலராத காலை. வெளியூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து செல்கையில் ஒரு திருப்பத்தில் ஒரு சைக்கிளில் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பி, நிதானித்துபாத்து வரக்கூடாதா? என்று குரலை உயர்த்த யோசிக்கையில்அட.. நம்ம மாணவர் மாடசாமி. தர்மசங்கடமாக விழித்தார். அவருடைய சைக்கிளின் காரியரில் பெரிய பால் கேன். விசாரித்தபோது சொன்னார். மூன்று ஆண்டுகளாக காலை 4 மணிக்கு எழுந்து பக்கத்து ஊரிலிருந்து பால்கேனை ஏற்றிக்கொண்டு 5 மணியிலிருந்து 7 மணிவரை வீடுகளுக்கு விநியோகித்துவிட்டு 7மணிக்கு வீட்டுக்குப் போய் அவசரமாகக் கிளம்பி 8மணிக்கு கல்லூரிக்கு வருவாரம். மாடசாமியின் வகுப்பறைத்தூக்கத்தின் நியாயம் தெரிந்தபோது சங்கடமாக இருந்தது. படிப்பில் வெகுசுமாராக இருந்தவர், மாலை நேரங்களில் மைதானத்தில் வெறும்காலில்  ஓடிக்கொண்டிருப்பார். மூன்றாம் வருடம் வெறுங்காலிலேயே மாரத்தானில் முதலாவதாகவும் வந்தார். ஒரு நாள் ராணுவத்துக்கு தேர்வான நல்ல செய்தியோடு வந்தார். ஆனால் சேருவதில் பெரும் சிக்கலொன்று இருந்தது. காட்டுநாயக்கர் சமூகத்தைச் சார்ந்த அவருக்கு சாதிச் சான்றிதழ் வாங்குவது பெரும்பாடாக இருந்தது. எந்த பின்புலமும் இல்லாத அவர் பெரும்போராட்டத்துக்குப்பின் சான்றிதழ் பெற்று ராணுவவீரராக எல்லையோரங்களில் வாழ்ந்தார். காஷ்மீர், மேற்கு வங்கம் எங்கிருந்தாவது அகால நேரங்களில் எப்போதாவது பேசுவார். இதல்லாம் நடந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்று என்முன் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் அவர் மகளும், +2 முடித்த அவர் மகனும் அதே அப்பாவி முகபாவத்தோடு நம் மாடசாமியும். அடுத்து என்ன படிக்கலாம்? என்பதற்கான அலோசனைக்காக. வானத்தில் பறப்பது அல்லது கடலில் மிதப்பது என்ற தீர்மானத்தில் பையன். 10 - 25 லட்சம்வரை கட்டணத்திற்குத் தூண்டில் போடும் படிப்புகள்எதற்கும் தயாராகவே இருந்தார் தந்தை. பையனிடம் பேசியதில ஒருவழியாக பி.எஸ்.சி., இயற்பியல் படிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவராகத் தெரிந்தார். வெறும் காலில் ஓடிய மாடசாமியின் புதல்வர் பி.எஸ்.சி. முடித்துவிட்டு ஏரோநாட்டிக் படிக்கும் உத்தேசத்தில் இருக்கிறார். அதை விட பெரிதான கனவுகளையும் அவரால் காணமுடியும். மனதுக்கு நிறைவாக இருந்தது. இந்திய சமூகத்தில் கல்வி மட்டுமே இத்தகைய மந்திரத்தை நிகழ்த்த முடியும்.


20ஆண்டுகளுக்கு முன், வகுப்பறைகளில் மாடசாமியின் சமூக பொருளாதார நிலையில் இருந்த மாணவர்கள் ஓரிருவர் மட்டுமே. மாடசாமியின் வகுப்பறையில்தான்  இயக்குநர் ராம் இருந்தார். சிங்கப்பூரில் ஆசிரியர்களாக இருந்து பட்டம் படிக்க வந்திருந்து பின்னாளில் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தில் பெரும் பொறுப்புகளில் இருந்த தாஸும் செழியனும் இருந்தார்கள். இன்று அமெரிக்கன் கல்லூரியிலேயே பேராசிரியராய் பணியிலிருக்கும் மீனாட்சிசுந்தரம் இருந்தார்படிப்புக்குச் சம்மந்தம் இல்லாத பல்வேறு வேலைகளில் இருந்தாலும்படிக்கும்போது கிடைச்ச அனுபவங்கள், தொடர்புகள் என் வாழ்க்கைக்கு உதவுதுஎன்று பலரும் சொல்லக் கேட்டிருட்டிருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பொதுச்சமூகம் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் +2 தேர்ச்சி சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. அல்லது அரசுக்கு அப்படியொரு நிர்பந்தம் இருக்கிறது. இந்த ஆண்டு 91 %. உழைக்கும் வர்க்கத்தினர் கல்லூரிகளுக்குக் குழந்தைகளை அனுப்புவது கணிசமாக அதிகரித்திருக்கிறதுகலை அறிவியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் அதன் பொற்காலத்தில் இருக்கின்றன. வசூலில்தான். அரசு கல்லூரிகளில் 500 ரூபாய் கட்டணம் என்றால் தனியார் கல்லூரிகளில் 2500, 3000, 4000, 10000 என தங்கள் விருப்பம் போல் வசூலிக்கத் தொடங்கிவிட்டன. அது பெரிய விசயமல்ல. இன்று வகுப்பறைகளில் 90 % மாணவர்கள் முதல் தலைமுறை படிப்பாளிகள். வகுப்பறைகளில் 60 முதல் 80 மாணவர்கள். அதிக மாணவர்களுக்கு கல்வி கொடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட shift system கல்லூரி கலாச்சாரத்தையே குழி தோண்டிப் புதைத்துவிட்டது. வகுப்பறையில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வளாகத்தில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வெறும் பட்டத்தோடு லட்சக்கணக்கில் முதல்தலைமுறை அப்பாவிகள் வெளியேறியவண்ணமிருக்கின்றனர். அரசுக்கு மாதிரியே கல்லூரிகளுக்கும் தேர்ச்சி சதவீதத்தைக்  அதிகரித்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. நடுத்தரவர்க்க மாணவர்கள், குடும்பத்தினரின் கவனிப்பு ஆலோசனைகளில் அவர்களுக்கான வழிகளைக் கண்டடைந்து விடுகிறார்கள். மாட்டிக்கொண்டவர்கள் அடித்தட்டு மாணவர்கள். கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை, கட்டணம், அவர்களுக்கான வசதிகள், போதிக்கப்படும் கல்வி, அவர்கள் பெற்ற திறன்கள் பற்றி கேள்வி கேட்க (தரவரிசைப் பட்டியல் மட்டும் வெளிவரும்) முறைப்படுத்த எந்த வழி முறைகளும் இல்லை. மிகவும் அபாயகரமான நிலையில் இந்திய உயர்கல்வி இருப்பதைப் பற்றிய தீவிரமான உரையாடல்கள் இல்லை. இன்னும் 10ஆண்டுகளில் இந்தியா எதிர்கொள்ளப்போகும் அதிதீவிரப் பிரச்சனை படித்தவர்களின் வேலையின்மை. 70களின் நிலையைவிட பன்மடங்கு கூடுதலாக இருக்கப்போகிறது. பெருமளவிலான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. (நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரும் சீட் கேட்டு வருகிறார்கள்என்ன படிப்பது? எங்கு படிப்பது? என புரியாமல் சீட்டுகளுக்காக கல்லூரிகளின் வாசல்களில் மக்களா அலைமோதுகிறார்கள். பரிதாப உணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் கலந்தவனாக இதை எழுதுகிறேன்

வியாழன், 4 ஏப்ரல், 2019

சூப்பர் டீலக்ஸ் - விமர்சனம்

Image may contain: 6 people, text













                   ஹைப்பர் லிங்க் சினிமாக்கள் எப்போதுமே எனக்கு விருப்பமானவை.
வன்முறை, குற்றம், பாலியல் ஒழுங்கு மீறல்கள், பெருநகரப்பண்பாட்டில் அடித்தள மக்களின் வாழ்வியல் இவற்றினூடாக இருத்தலின் அர்த்தமின்மையையும் உலகம் வலியுறுத்திவரும் அறம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்ப கூடியவை இந்த ஹைப்பர் லிங்க் படங்கள் என்பேன். பகடியும் கேளிக்கையுமாக நகரும் இப்படங்கள் இன்னொரு அடுக்கில் ஆழமான கேள்விகளை எழுப்பக்கூடியவை. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு பார்வையாளனைச் சஞ்சலப் படுத்துபவை. Plup Fiction, Magnolia, Traffic, 21 Grams, Amores Perros, City of God, Babel ஆகியவை இந்த வகைமையில் உச்சத்தைத் தொட்டவை. 21 grams, Amores Perros, Babel ஆகிய மூன்று படங்களையும் இயக்கிய அலக்சாந்த்ரோ கொன்சாலஸ் இந்த வகையான படங்களை இயக்குவதில் ஒரு மேதை.
                 குமாரராஜா அப்படி ஒரு ஹைப்பர் லிங்க் சினிமாவை முயற்சித்திருக்கிறார். ஆரண்யகாண்டம் இப்போது வரைக்கும் எனக்குப் பிடித்தமான படமாகவே இருக்கிறது. 8 வருடங்கள் கழித்து கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்ததாலோ என்னவோ படம் கூடி வந்தமாதிரி தெரியவில்லை.
                 ஆரண்யகாண்டத்தில் ' எது தேவையோ அதுவே அறம்' என்பது போன்ற வாசகத்தோடு படத்தைத் தொடங்கியவர் குமாரராஜா. ' தேசத்தின் மேல் இருந்தால் அது பக்தி, மொழியின் மேல் இருந்தால் அது பற்று, ஆனால் சாதியின் மேல் இருந்தால் மட்டும் அது வெறியா?' என்று சூப்பர் டீலக்ஸில் ஒரு உரையாடல் வருகிறது. இன்னொரு இடத்தில் நீலப்படத்தில் தோன்றியிருந்த அம்மாவை பார்த்து ' சினிமால சான்ஸ் தாரேன்னு யாரும் ஒன்ன அப்டி நடிக்க வைச்சுட்டாங்களாம்மா' என்று கேட்கும் பையனிடம் அம்மா ' நான் தெரிஞ்சுதான் நடிச்சேன். அந்த மாதிரி படத்த லச்சம் பேரு பாக்குறாங்கன்னா அதுல நடிக்க நாலுபேர் இருக்கத்தான் செய்வாங்க. அவங்கள சொல்லாம என்ன மட்டும் எப்படி சொல்லலாம்' என்கிறாள். இந்தமாதிரி உரையாடல்களைவைப்பதற்கு கலகத் தன்மையும், புத்திசாலித்தனமும் கொஞ்சம் அரைவேக்காட்டுத்தனமும் தேவைப்படுகிறது. 
                  பாடல்கள் இல்லாமல் இருப்பது ஆசுவாசமாக இருக்கிறது. இசையும் அளந்துதான். பழைய பாடல்களை சில இடங்களில் அட்டகாசமாய் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் அதிகம். 
                  விஜய் சேதுபதி ஒப்பனையைத் தவிர பிரத்தியேக்மாக ஒன்றும் நடித்துவிடவில்லை. அரவாணிகளுக்கான நளினம், அங்க அசைவுகளிலோ குரலிலோ கூடத் துலக்கமாக வெளிப்பட்ட மாதிரி தெரியவில்லை. விஜய் சேதுபதி என்ன செய்தாலும் அதைக் கொண்டாடுகிற மனநிலையில் ரசிகர்களும் ஊடகங்களும் இருக்கிறார்கள். எனக்கென்னவோ சேதுபதி ஒரே மாதிரியாகவே நடித்து வருகிறார். அதாவது அவருடைய சுயமான உடல் மொழி, பேச்சு மொழி மற்றும் பாணி. . அவருடைய தனிப்பட்ட நல்லியல்புகளை நடிப்பின்மேல் ஏற்றிவிடுகிறார்கள் போலத் தெரிகிறது.
                  மிஷ்கின் பாத்திரம் தமிழ் சினிமாவில் புதுசு. ஆனால் மாபெரும் சொதப்பல். தமிழ் கிறித்தவ விசுவாசிகளுக்கென்றே ஒரு தனித்த மொழிநடை, மாடுலேசன் இருக்கிறது. அதை கவனமாகப் பயன்படுத்தியிருந்தால் பிரமாதப்படுத்தியிருக்கலாம். சபீபகாலமாக தமிழ்க்கிறித்தவர்களிடையே பெருகிவரும் மூட பக்தியை பகடி செய்தமைக்கு என் தனிப்பட்ட நன்றி. ஆனால் அதைச் சரிவரச் செய்யாமல் விட்டதை ஒரு கிறித்தவனாகக் கண்டிக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
                   தாய்மொழி பேசி நடிப்பதன் அவசியத்தை பகத்பாசில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார். சில நல்ல தருணங்கள் அவரின் தமிழால் மதிப்பிழந்துவிடுகின்றன. பகத்பாசிலேதான் இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டுமா? சில சுவாரஸ்யமான தருணங்களும் பல ஆயாசங்களும் கலந்து படம் முடிந்து வெளியே வரும்போது, படம் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்று தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
                  நின்று நிதானித்துப் பார்த்தால் தமிழின் புதிய புதுவகை (hybrid ) சினிமாக்களில் சூப்பர் டீலக்ஸுக்கு இடம் கொடுத்தே ஆகவேண்டும்.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

டூ லெட் -விமர்சனம்



தமிழகத்தின் நவீன நாடகங்களில் பெரும்பாலானவை பார்வையாளர்களைப் பலவகைகளிலும் சோதிப்பவை. கடந்த 35 வருடங்களாக நிலமை இதுதான். காரணத்தை யோசித்துப் பார்த்தால் நவீன நாடகங்களில் செயல்படுவோர் பெரும்பாலும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள். இவர்களுடைய பிரச்சனையே உலக நாடகக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்திருப்பதுதான் என்று தோன்றும். கோட்பாடுகளுக்குள்ளும் கலை பற்றிய தெள்ளத்தெளிவான புரிதலுக்குள்ளும் சிக்கிக் கொண்டு பார்வையாளனைப் பரிதவிக்க விட்டு விடுவார்கள். டூ லெட் சினிமாவில் நேர்ந்திருப்பதும் அதுதான்

உலக சினிமாக்களில் மிகுந்த பரிச்சயம்  கொண்டசெழியனும் பார்வையாளர்களைப் பொருட்படுத்தாத சினிமாவைக் கொடுத்திருக்கிறார். 70களின் கலைப்படங்கள் என தரப்படுத்தப்பட்ட சினிமாக்களின் அச்சு அசலாக டூ லெட இருக்கிறது. அசையாத  கேமரா கோணங்கள். அளந்து பேசும் பாத்திரங்கள். சுவாரஸ்யம் வந்துவிடக் கூடாது என்ற பிடிவாதம். குறைந்த வெளிச்சம். நாயகி படுத்துக்கொண்டு தன் மகனைப் பற்றிப் பேசுகிறார். அசையாத ஷாட். நான் அரங்கில் பார்வையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு சுற்றுப்பார்த்துவிட்டு திரைக்கு வந்தபோதும் நாயகி அசையாத ப்ரேமுக்குள் பேசிக்கொண்டிருந்தார். சினிமான்னாலே வீடு தர்றதிலை எனும் போது இன்னொருவர் ’50 வருஷமா சினிமாக்காரன் கையில நாட்டையே குடுத்துருக்காய்ங்க…’ என்று நிறுத்திவிடுகிறார். ‘வீடு குடுக்கமாட்டாங்களாமா?' என்று தொடரக்கூடாது என்ற பிடிவாதம் தெரிகிறது. தந்தையும் மகனும் தொலைக்காட்சியில் படம் பார்க்கிறார்கள். என்ன படம் என்று தெரிவதில்லை. பின்னனி ஒலியிலிருந்து அதுரெட் பலூன்குறும்படம் என்று ஊகிக்கிறோம். அந்தப்படம் 1958 என்று நினைவு. அறிந்தவைகளினின்று விடுபட முடியாத சிக்கலுக்குள் படைப்பாளன் சிக்கிக் கொள்வது பெரும் சோகம்

கோட்பாடுகளின் பரிச்சயமும் ஒரு துறை பற்றிய ஆழமான அறிவும் பேராசிரியர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பலமாக அமையலாம். படைப்பாளிகளுக்கு அது சுமை என்றே தோன்றுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் வேறு வகையான சினிமா மொழிக்குப் பழக்கப்பட்டுவிட்டவர்களை எப்படி முன்னோக்கித்  தள்ள முடியும். மேலும் தமிழ் சினிமாவில் எளிமையும், அழகியலும், புத்திசாலித்தனமும் கொண்டகாக்கா முட்டை, மேற்குத் தொடர்ச்சி மலைபோன்ற சினிமாக்கள் சாத்தியமான பின்டூ லெட்என்னவிதமான சினிமா அனுபவத்தைத் தர முயல்கிறது என்பது விளங்கவில்லை.


இந்தச் சினிமாவுக்கான கூடுதலான புகழுரைகள் செழியன் போன்ற தேடலும் தீவிரமும் கொண்ட படைப்பாளியைத் திசை திருப்பிவிடக்கூடும் என்பதாலேயே இதை எழுத வேண்டியிருக்கிறது.  

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.