திங்கள், 2 அக்டோபர், 2017

சிவாஜி எனும் கலைஞனை நினைவு கூர்வதென்பது...



தமிழ்சினிமாவின் இரண்டு நடிகர்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தார்களாம். (அப்போது பிரபலமாக இருந்த நடிகர்களை அவர் குறிப்பிட்டார். இப்போதும் உங்களுக்குப் பிடித்த/ பிடிக்காத இரண்டு நடிகர்களை நீங்கள் ஆட்டோவில் அமர்த்திக் கொள்ளலாம்.) அவர்கள் பயணித்த ஆட்டோவுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின்புறத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்ததாம். இருவரில் இளையவரான ஒரு நடிகர் மூத்தவரிடம் கேட்டாராம்… அண்ணே அந்த ஆட்டோவுல..’ தோலின் பளபளப்பும் சுரணையற்ற தன்மையும் தொழுநோயின் அறிகுறிகள்னு’ போட்டுருக்கே, நம்ம தோலும் பளபளப்பாத்தான் இருக்கு இயக்குநர்கள் நடிக்கச் சொல்லும்போது எந்த உணர்ச்சிகளும் வர்ற மாதிரி தெரியல… அப்ப நமக்கும் தொழு நோயான்னே…’ என்றாராம் அப்பாவியாக…நம் சினிமா நாயகர்கள் பலரின நடிப்பாற்றலைப் பார்க்கும் போது என்னுடைய நண்பர் முத்துராமலிங்கத்தின் புகழ்பெற்ற இந்த நகைச்சுவை துணுக்கு நினைவுக்கு வந்துவிடும்.

இது ஒரு நகைச்சுவை மட்டுமல்ல என்பது நம்நாயகர்களின் ஒரேவிதமான நடிப்பை பார்த்து வருபவர்களுக்குத் தெரியும். இத்தகைய யோசனைகளின்போது சிவாஜி எனும் கலைஞனை நினைத்தாக வேண்டியிருக்கிறது.

சிவாஜி மணிமண்டபத்தையொட்டி சிவாஜி பற்றிய பதிவுகள் ஊடகங்களில் புழங்குவதைப் பார்த்தபோது சிவாஜியோடு எங்கள் பேராசிரியர் வசந்தன் அவர்கள் சிவாஜியைப் பற்றிப் பேசியவைகளும் சேர்ந்து நினைவுகளை நனைக்கின்றன. பேராசிரியரிடம் உரையாடுவதற்கு முன்னால் எனக்கு சிவாஜி பற்றிய நல்ல சித்திரங்கள் எதுவுமில்லை. காரணம் நான் சிறுவயதில் அதிகம் சினிமாக்கள் பார்ப்பதை ஊக்குவிக்காத கிறித்தவ குடும்பச் சூழலில் வளர்ந்தவன். மேலும் நான் வாழ்ந்த ஊரிலிருந்த திரையரங்கம் வெகுசீக்கிரமே ‘தீப்பட்டி ஆபீசாக’ மாற்றமடைந்திருந்தது.

நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தகாலத்தில் சிவாஜியின் சகிக்கமுடியாத படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலம். மதுரை சினிப்பிரியா தியேட்டரில் நெஞ்சத்தைக்கிள்ளாதேயில் ‘பருவமே புதிய பாடல் பாடு’ என நாங்கள் சொக்கிக்கிடந்தபோது மினிப்பிரியாவில் திரிசூலம், பட்டாக்கத்தி பைரவன் வகையறா படங்களில் சிவாஜி மிரட்டிக்கொண்டிருந்தார். ஆக எனக்கு சிவாஜியின் பழைய படங்களோடு பெரிய பரிச்சயம் இருக்கவில்லை. நடிப்பின் இமயம் சிவாஜி என்பது ஒரு தேய்வழக்குபோல் எல்லோராலும் சொல்லப்பட்டு வந்ததேதவிர ஏன் அவர் நடிப்பின் இமயம்? என்பதை யாரும் விலாவாரியாகப் பேசியதில்லை. முதன்முறையாக வசந்தன் ஒரு அமர்வில் சிவாஜியின் பாடல் காட்சிகளில் ஒன்றான ‘உள்ளம் என்பது ஆமை’ யில் சிவாஜி கைகளைப் பயன்படுத்துவதைப் பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தார். மேற்கத்திய கிளாசிக் சினிமாக்களைக் கரைத்துக் குடித்த அவர் கிளார்க் கேபிள், மார்லன் பிராண்டோ வரைக்குமான வரிசையில் சிவாஜியைப் பொருத்தி பேசத்தொடங்கியதைத் தொடர்ந்து சிவாஜியைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அவருடைய பழைய பாடல்களில் குறிப்பாக கறுப்பு வெள்ளைப் படங்களில் சிவாஜியின் அசைவுகள், நகர்வுகள்(movements), நிற்றல் நிலைகள்(postures) மிகுந்த கவித்துவத்தோடு வெளிப்படுவதைக் காணமுடிந்தது. குறிப்பாக கை மற்றும் விரலசைவுகளில் அவர் ஒரு அபாரமான நடிகர் என்பதை வெளிப்படுத்தியபடியே இருப்பார். ஒரு நடிகனுக்கு முகம் தவிர்த்து கைகளே பிரதானமான நடிப்புக் கருவியாக அமைகிறது என்பதைத் தெரிந்திருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர்கள் மிக அபத்தமாகப் பயன்படுத்துவது கைகளைத்தான். உள்ளம் என்பது ஆமை எனும் அந்தப்பாடலில் அவர் விரல்கள் நடன அசைவுகளை ஒத்ததான நளினத்துடன் இயங்குவதை பார்த்துக்கொண்டே இருக்கமுடியும். சிவாஜி எனும் கலைஞனைப் புரிந்த இயக்குநர்கள் இருந்ததால்தான் அவர் பாடல்களில் குளோஸ்-அப் மற்றும் மீடியம் ஷாட்களே மிகுந்திருக்கும். இப்போதும் கூட நம் இயக்குநர்கள் நம் நாயகர்களைப் புரிந்து வைத்திருப்பதால்தான் பாடல் காட்சிகளைப் படமாக்கச் செல்லும்போது ஒரு திருவிழாக்கூட்டத்தையே லாரிகளில் அள்ளிச் செல்கிறார்கள் போலும். ஒரு ஒப்புமைக்காக சிவாஜியின் ‘உள்ளம் என்பது ஆமையையும்’ எம்.ஜி.ஆரின்.’புதிய வானம் புதிய பூமி’ இரண்டுபாடல்களையும் அவதானித்தால் இருவருக்குமான பாரதூர இடைவெளிகளைப் புரிந்து கொள்ள முடியும். புதிய வானம் பாடலில் புரட்சித்தலைவர் ஒரு வெற்று சூட்கேசையும் ஒரு சிறு கோலையும் ( அது மந்திரக்கோல் போலவும் வாக்கிங் செல்லும் போது குறுக்கிடும் பைரவர்களை விரட்டுவதற்கானது போலவும் தோற்றமளிக்கிறது) வைத்துக்கொண்டு கைகளை நெஞ்சுக்கும் வானத்துக்குமாக விசிறிக்கொண்டிருப்பார். அதிகமும் லாங் ஷாட்களில் ஓடிக்கொண்டே இருப்பார், கேமராவை அருகில் கொண்டுவந்துவிடாதீர்கள் என்பது போல்.

https://www.youtube.com/watch?v=boyVeLaj14Y

https://www.youtube.com/watch?v=fa6LPvNAbJ0


இப்படி சிவாஜியின் நடிப்பின் பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாகப் பேசமுடியும். பேச வேண்டும். அப்படிப் பேசுவதாலேயே எதிர்காலத் தலைமுறைக்கு சிவாஜி எனும் கலைஞனைக் கடத்தமுடியும். ஆனால் எனக்குத் தெரிந்து சிவாஜி பற்றிய ஆய்வு நோக்கிலான சில கட்டுரைகள் தவிர்த்து பெரும் பதிவுகள் இல்லை. ஏனெனில் இன்னும் 25 ஆண்டுகளுக்குப்பின் சிவாஜியின் படங்கள் புழக்கத்தில் இருக்கப்போவதில்லை. சினிமா எப்போதும் பெரும்பாண்மை மக்களோடு புழங்குவதுதான். ஆக சிவாஜியின் படங்களைத் தேடிப்பார்க்கவேண்டுமென்ற தேவை இருந்தாலொழிய யாரும் தேடப் போவதில்லை. எதிர்கால நடிகர்கள், ஆய்வாளர்கள், கலை விமர்சகர்களின் தேடுதலுக்கு உரியவராக சிவாஜி இருந்தால் மட்டுமே சிவாஜி எனும் கலைஞன் காலம் கடந்தும் வாழ்வார். அப்படித்தான் மைக்கேல் ஆஞ்சலோ, மொசார்ட், லாரன்ஸ் ஒலிவியர், சேக்ஸ்பியர், கம்பர் போன்ற மகா கலைஞர்கள் இன்றும் அழியாமல் வாழ்கிறார்கள். எந்தக்கலை வடிவத்தையும் சுவைஞர்களும் விமர்சகர்களுமே தங்கள் பதிவுகளால் கடத்துகிறார்கள். அதைவிடுத்து புகைப்படங்களையும் சிலைகளையும் உள்ளடக்கிய மணிமண்டபங்களால் எந்தக் கலைஞனையும் இருத்திவிட முடியாது. அல்லது மணிமண்டபங்களையாவது அர்த்தப்பூர்வமாக வடிவமைக்க வேண்டும். விமர்சகர் ஞாநி ஒரு முறை பரிந்துரைத்ததைப் போல ( ஒரு நிரந்தர நாடக அரங்கம், நூலகம், சிவாஜியின் படங்களை எப்போதும் பார்க்கும் வசதி) செய்வதற்கு அரசோ, நடிகர் சங்கமோ, சிவாஜியின் குடும்பத்தினரோ கூட எந்தப் பிரயத்தனமும் செய்யப்போவதில்லை.

நண்பர் ஒருவர். இலங்கையில் பேராசிரியராக இருந்து புலம் பெயர்ந்து தற்போது லண்டனில் வசிப்பவர். அவருடைய இளம் பிராயத்தில் சிவாஜி படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் ஆன அன்றே பார்த்துவிடும் துடிப்பில் கள்ளத்தோணியில் தமிழகம் வந்து படம்பார்த்துச் செல்லும் சிவாஜியின் பரம ரசிகர். வெறுமனே ரசிகராக மட்டுமல்லாமல் அவரை உலக நடிகர்களோடும் நடிப்புக்கோட்பாடுகளோடும் இணைத்துப் பேசக்கூடியவர். அவர் சிவாஜிவை மையமாகக் கொண்டு ஒரு கருத்தரங்கை நடத்தி அதில் வரும் கட்டுரைகளை நூலாக்க வேண்டும் என்று ஏறத்தாழ 4ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார். இந்தியா வரும்போதெல்லாம் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் என செய்த முயற்சிகள் எதுவும் ஈடேறவில்லை. சிலமாதங்களுக்கொருமுறை ‘அந்த சிவாஜி செமினார்…’ என்பதான தொலைபேசி உரையாடல்களாக மட்டுமே இருந்துவருகிறது.

ஆகவே காலத்தால் அழிக்க முடியாத கலைஞன் என்ற வாய்ப்பேச்சுகளால் ஆகப் போவதொன்றுமில்லை. உருப்படியாகச் செய்ய வேண்டுவன பற்றி யோசிக்க வேண்டும். முன்னெடுக்கப் போவது யார்? ரசிகர்களா? நடிகர் சங்கமா? அரசா? பல்கலைக் கழகங்களா? அவரின் குடும்பத்தாரா? யாரறிவார்?







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.