ஞாயிறு, 17 நவம்பர், 2013

சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்: எரிந்த பெருங்கனவு





ஊகங்களும், மிகைப்படுத்தல்களும், அரசியல் சாய்வுகளும் நிரம்பிய கதைகளும் தகவல்களுமாய் ஈழத்தின் இறுதிப் போர் தமிழகத்தின் உரையாடல்களில் நீர்த்துப் போய் நெடுநாட்களாகிவிட்டது. ஆனால் ஈழக்கனவைச் சுமந்து திரிந்த உண்மையான இனஉணர்வாளர்கள் மற்றுமான சாமான்ய தமிழர்களின் பெரும்குழப்பத்தை தீர்க்கும்விதமானது இந்நூல்.

ஈழப் போரின் இறுதிநாட்களைப் பற்றிய உண்மையான சித்திரத்தை வெளிக்கொண்டுவரும் இந்நூல் பி.பி.சி. செய்தியாளரான ஃபிரான்சிஸ் ஹாரிசன் எனும் பெண்மணியால் எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்டுள்ளது என்பதைவிட தொகுக்கப்பட்டுள்ளது என்பதே பொருத்தமானது. நூலாசிரியரான ஹாரிசனின் ஆவணப்படுத்தியுள்ள இந்நூல் ஈழப்போரின் இறுதிநாட்களைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம். இறுதிப் போர்முடிந்து போதுமான கால அவகாசத்தின் பின் போரின் நேரடி சாட்சியங்களாக இருந்த ஊடகவியலாளர், தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர், புலிகளின் பகுதியில் இயங்கிய மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவர், மருத்துவ மனையில் சேவை புரிந்த  இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையின் கன்னிகாஸ்திரி, ஆசிரியையும் முன்னாள் போராளியின் மனைவியுமான பெண்மணி, போராளி ஒருவரின் விதவைத்தாய், போர்முனையில் பணியாற்றிய தன்னார்வத் தொண்டர், இறுதி நொடிவரை போரில் பங்கு பெற்றிருந்த போராளி, புலிகள் பகுதியில் வியாபாரம் செய்த கடைக்காரர், போராளிக் குடும்பத்திற்கு மருமகளாகச் சென்ற பெண் என பத்து பேரின் சாட்சியங்களைத் தொகுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது

  இந்த சாட்சியங்கள் அனைவரும் இலங்கையிலிருந்து வெளியேறி மேற்குநாடுகளின் நகரங்களில் தஞ்சம் புகுந்து, அமைதியான வாழ்க்கையை வாழ முயற்சித்து நாளும் போர்க்கால நினைவுகளால் துரத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். போரிலிருந்து மீண்டு எல்லாவற்றையும் நிதானமாக அசைபோடும் இடத்தை வந்தடைந்தவர்கள்.
40களில் இருந்த அந்த மருத்துவரின் அனுபவங்களும் சேவையும் ஒரு காவியம். நூலாசிரியர் சொல்வதைக் கேட்கலாம்அவரோடிருந்த மருத்துவர்கள், நர்சுகள் ஆகியோர் குறைந்தது 20,000 பேரையாவது காப்பாற்றியிருக்கிறார்கள் என்று கணக்கிடுகிறார்.  இருப்பினும் போரின் கடைசி நாளின்போது ஒரு மரத்தின் கீழ் தான் கைவிட்டுவந்த 150 நோயாளிகளைப்பற்றியே இன்னும் கவலைப்படுகிறார். அவருடைய சாரத்தை இழுத்துப் பிடித்த கைகளையும் தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சிய குரல்களையும் விட்டு, தாறுமாறாகப் பறக்கும் தோட்டாக்களிலிருந்து தப்பித்து இலங்கை ராணுவத்திடம் சரணடைய ஓடியதை மறக்க நினைக்கிறார்.

இப்போதும் இலங்கை ராணுவத்தால் தேடப்படுகிறவராக இருக்கிறார். “நான் இலங்கையைவிட்டு வெளியேறியபின்பு அவர்கள் என்னைத் தேடினார்கள். ஆனால அது மிகப் பிந்திவிட்டது. முதலில் புலித்தலைவர்களைத் தேடினார்கள். அடுத்ததாக சாட்சிகளாக நாங்கள் முக்கியமானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். (பக்.113)

கடைசியில் மக்களோடு சரணடைய வேண்டிய கட்டமும் வந்தது
அவ்விடத்தில் சோதனைக்காகப் பொதுமக்கள் வரிசையாக நிற்க வேண்டியிருந்த்து.மருத்துவர் நிரோனின் (கற்பனையான பெயர்) மருத்துவ உதவியாளன் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டான். மூன்று வருடங்களாக நூறாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்த அந்த உதவியாளன் எந்தத் தடயமுமின்றி காணாமல் போய்விட்டான். விசுவாசத்துடன் உதவிய ஒருவனையே தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற கவலை புலம்பெயர்ந்த மருத்துவர் நிரோனை இன்னும் வதைக்கிறது…’

அடுத்து நடந்த விசயங்கள் எல்லாம் மங்கலானவையாகவே ஜாபகத்தில் இருந்தன. மருத்துவர் நிரோனுக்கு அவை துன்பமானவை. அவர் உடல் முழுவதும் கையைவிட்டுத் தேடினார்கள். அவர் முதுகில் சட்டையுடன் ஒட்டியிருந்த எரியுண்ட காயங்களை ராணுவத்தினன் தொட்டபோது வேதனையில் துடித்தார். அதன்பிறகு அவருக்கு நினைவில் இருந்தது தண்ணீர்த் தாகம் மட்டுமே. அவருடைய வாய் தவிப்பால் வறண்டுவிட்டது. புழுக்கத்தால் வியர்த்தொழுகும் மத்தியான வெயிலில் மயங்கி விழப்போகிறோம் என்று அவர் நினைத்தார். தமிழர் ஒருவர் கொண்டு சென்ற ஒரு கொள்கலன் தண்ணீரில் ஒரு சொட்டு நீர் தரும்படி கேட்டார்.

என்னை அவருக்குத் தெரியாது. அவர் எனக்குத் தரவில்லை. நான் இருபத்தாறு முறை என் நோயாளிகளுக்கு ரத்தம் தானம் செய்திருக்கிறேன் என்பதை அந்தத் தருணத்தில் நினைத்துக் கொண்டேன். இப்போது எனக்கு ஒரு சொட்டு நீர் கிடைக்கவில்லை. நான் யாரென்று அவருக்குச் சொல்லவில்லை. கொஞ்சம் தண்ணீர் தரும்படி அவரைக் கெஞ்சினேன். அவர் மறுத்துவிட்டார். (பக்.126-127)

ஒவ்வொருவரின் அனுபவங்களும் நம்மை உலுக்கிவிடக்கூடியவை. அதுபோலவே போரை ஆரம்பிக்கத் தெரிந்த புலிகளால் போரை நிறுத்தத் தெரியாமல் போன யதார்த்தமும் நமக்கு அச்சூழலை விளங்கிக் கொள்ள ஏதுவாகிறது.

அவர்களுக்கு யதார்த்தம் பற்றிய உணர்வே இருக்கவில்லை. அவர்கள் பேசவே முன்வரவில்லை. நாங்கள் திகைத்துப்போய் நின்றோம்,” என்றார் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட நார்வே தூதர்களில் ஒருவர். பிரபாகரனின் சொற்களஞ்சியத்தில் சரணடைதல் என்னும் சொல்லே இல்லாமல் இருக்கலாம். எதிர்காலச் சந்ததியினர் தமிழரின் பிரிவினைக் கொள்கையை உயிருடன் வைத்திருப்பதற்காகத் தன் தியாகத்தால் உறுதி செய்தார் என்றும், அதுவே அவர் அவர்களுக்கு அளித்த கொடையும் வசீகரமும்  என்றும் சிலர் நம்புகிறார்கள். அவர் அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டுப்போனபோது சிலர் பிழையான ஆலோசனைகளும் பிழையான தகவல்களைக்கூட அளித்துள்ளார்கள் என்றும் சிலர் சொல்கின்றார்கள்.(பக்.102)

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூலை மொழி பெயர்த்திருப்பவர் என்.கே. மகாலிங்கம். ஏற்கனவே ‘சிதைவுகள்’ உள்ளிட்ட முக்கிய மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளவர். இந்நூலின் மொழிபெயர்ப்பு மிகவும் உயிரூட்டமானது. அதற்கு தற்போது கனடாவில் வசித்துவரும் மொழிபெயர்ப்பாளர் ‘மகாலிங்கம்’ ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

காலச்சுவடு வெளியீடாக 2012இல் வெளிவந்துள்ள இந்நூலின் அடுத்தபதிப்பு வந்துவிட்டதாகவும் கேள்வி.

1 கருத்து:

  1. ஈழம் தொடர்பாக , மறைக்கப்பட்ட செய்திகள், செய்த தவறுகள் என்று இருபுறமும் ஏராளமாக இருக்கிறது என்றாலும், இன்னும் அவர்களை வாழ விடாமல் செய்வது
    நம் பிற்போக்கு அரசியல்வாதிகள்தான் .

    பதிலளிநீக்கு

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.