வியாழன், 1 மே, 2014

ஆர்டிஸ்ட் (ARTIST) : பொய்மையின் நிறம் நீலம்





2013 ன் மளையாளப் படங்களைப் பற்றிப் பேசிய நண்பர்கள் யாரும் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லியிருக்கவில்லை. பகத் பாசில் உருவத்தைக் குறுவட்டின் அட்டையில் பார்த்துத் தற்செயலாய் வாங்கி வந்ததுதான். இப்படத்தின் இயக்குநர் சாம்பிரசாத்தின்இங்கிலிஷ்படத்தைப் பார்த்திருந்தபோதும் அதன் இயக்குநர்தான் இவர் என்பதும் நினைவில் இல்லை. எல்லாவற்றையும் மீறி இப்படம் அற்புதமான கலை அனுபவத்திறகுள் மூழ்க்கடித்தது.

ஓவியத்தை உயிராக நேசிக்கக் கூடிய ஒருவன். அவன் பெயர் மைக்கேல். உலகத்தின் வனப்புகளையெல்லாம் வண்ணங்களால் வானம்போன்ற அகன்றதொரு கான்வாசில் தீட்டிவிடத் துடிப்பவன். ஓவியக் கல்லூரி சிற்றுண்டிச் சாலையில் தேநீருடன் பிகாசோவையும் வான்காவையும் அலசிக்கொண்டிருக்கும்போது புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் காயு என்ற காயத்ரியைச் சந்திக்கிறான். ஓவியங்களில் யாதார்த்தத்தைப் பற்றிய அலசல் அது. பீத்தோவனின் சிம்பனியிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் யாதார்த்தத்தையா அளவுகோலாக வைக்கிறீர்கள்ஒரு நல்ல ஓவியம் என்பது என்ன? … .. குட்டி நீ சொல்லு .. என்கிறான் காயத்ரியைப் பார்த்து. யாதார்த்தமோ என்னவோ ஒரு ஓவியம் வரைபவனின் எண்ணத்தை, மனதை நேர்மையாக பிரதிபலிக்க வேண்டும் என்கிறாள். இருவரும் பரஸ்பரம் ஈர்க்கப் படுகிறார்கள்.


 ஒரு கலைஞனின் கலகத்தனமான வாழ்க்கைமுறை. அவனுக்குள் ஊறிப்போன ஒருவகையான சுயநலம். சுற்றிலும் இருப்பவர்களைப் பொருட்படுத்தாத கர்வம், அகம்பாவம் ஒரு பக்கம். அதேபோல் காதலுக்காக எல்லாவற்றையும் இழப்பவளாக அவனையே சுற்றிவரும் எளிமையான பெண்மனம். குடும்பத்தை, நண்பர்களை, சுகவாழ்வை தன் சொந்த விருப்பங்களை எல்லாவற்றையும் உதறியவளாக வரும் அவள். அவளுடைய காதலும் தாய்மையும் நட்பும் தூக்கியெறியப்பட்ட பின்பும் தன்வழியே ஒதுங்கிக் கொள்ளும் காயத்ரி. வரலாறுநெடுகவும் இணைந்து வரும் நட்பும் துரோகமுமாய் அவர்களின் நண்பன் அபய். அவனுடைய காதல் மனைவி. பிரதான பாத்திரங்கள் இவர்களே. மைக்கேலின் அப்பா திரைக்குள் நுழைவதேயில்லை. காயத்ரியின் அப்பாவும் அம்மாவும் சில காட்சிகளில். பெரும்பாலான காட்சிகள் நான்கு சுவர்களுக்குள். மைக்கேலும் காயத்ரியும்.. நண்பர்களாய்சேர்ந்து வாழ்பவர்களாய்காதலும் கோபமும் எரிச்சலும் விரக்தியும் மாறி மாறி துரத்தும் வாழ்க்கைச் சுழலில் சிக்கும் பொழுதுகள். இருவரும் கச்சிதமான நடிப்பால் திரையை நிறைக்கிறார்கள். பகத் பாசிலின் மெருகேறிவரும் நடிப்பாற்றலைப் பற்றிப் புதிதாய்ச் சொல்லவேண்டியதில்லை. ஆனால் காயத்ரியாக நடித்திருக்கும் பக்கத்துவீட்டுப் பெண்போன்ற குட்டையான.. அடக்கமான   உறுத்தாத வண்ணங்களில் உடையணிகிற நடுத்தரவர்க்கப் பிராமணப் பெண்ணாக வரும் ஆன் அகஸ்டின்நடித்திருப்பதாகவே தெரியவில்லை. அற்புதம். 2013ன் மாநில விருதுகளில் சிறந்த நடிகர் நடிகைக்கான இருவிருதுகளையும் இப்படம் பெற்றிருப்பது மிகப் பொருத்தமானதே.

 
நடைமுறை வாழ்க்கைச் சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாமல் வாழ முயற்சிக்கும் மைக்கேலை நேசிக்கும் காயத்ரி தன் வீட்டை, படிப்பை எல்லாவற்றையும் துறந்து அவனோடு திருமணமாகாமலே வாழத்தொடங்குகிறாள். மைக்கேலின் தந்தை தன் உதவியை நிறுத்திவிட அடிப்படைத் தேவைகளையே சந்திக்க இயலாமல் காயத்ரி வேலைக்குப் போகிறாள். சமைக்கிறாள். வீட்டையும் மைக்கேலையும் பராமரிக்கிறாள். அவனுக்குத் தேவையான வரை பொருட்களை வாங்கித் தருகிறாள். அவனின் கரிசனையற்ற சுடுசொற்களைப் பொறுத்துக் கொள்கிறாள். ஒரு விபத்தில் மைக்கேலின் பார்வை பறிபோகிறது. மிகக் கடுமையான நாட்களாக அவை அமைகின்றன. படிப்படியாக தடவித்தடவி மைக்கேல் வரையத் தொடங்குகின்றான். தொடர் ஓவியங்களாக வரைந்து ஒரு கண் காட்சியில் வைக்க வேண்டும் என்பதில் ஆர்மாக இருக்கிறான். துரித உணவகம் ஒன்றில் வேலைபார்த்து சமாளித்துக்கொண்டிருக்கும் காயத்ரிக்கு அவன் கேட்கும் வண்ணங்களையும் உபகரணங்களையும் வாங்கித் தருவது எளிதாக இல்லை. மிக நெருக்கடியான நிலையில் அவர்களின் கல்லூரி நண்பன் அபய் தன்னிடம் உபயோகமில்லாமல் கிடக்கும் பெர்சியன் ப்ளூ வண்ணப் பெட்டிகளை எடுத்துச் சென்று மைக்கேலிடம் கொடுத்துவிடு. அவனுக்கென்ன தெரியப் போகிறது  என்று சொல்லும் அலோசனையை அவள் கேட்க வேண்டியதாகிறது. வரிசையாக வண்ணங்களை அடுக்கித் தரச்சொல்லும் மைக்கேலுக்கு காயத்ரி ஒரே வண்ணமான பெர்சியன் ப்ளூவை அடுக்கி வைக்கிறாள். மனதிற்குள் வெவ்வேறு வண்ணங்களைக் கற்பனை செய்தபடி மைக்கேல் ஒரே வண்ணத்தில் ஓவியங்களைத் தீட்டியபடி இருக்கிறான். குற்ற உணர்வுடன் மௌனமாக நாட்களை நகர்த்துகிறாள் காயத்ரி. நீல வண்ணத்தின் பல்வேறு கலவைகளால் நிறைந்த அவனின் ஓவியங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்று காயத்ரியைக் கேட்கிறான். ட்ரீம்ஸ் (கனவுகள் ) என்று வைக்கலாம் என்றவள் ட்ரீம்ஸ் இன் பெர்சியன் ப்ளூ என்று வைக்கலாம் என்கிறாள். விசயம் புரியாத மைக்கேல் ஏன் பெர்சியன் ப்ளூ? என்பவனிடம் ‘கனவுகளின் நிறம் நீலம்தானே’ எனச் சமாளிக்கிறாள்.





ஓவியக்காட்சி தொடங்குகிறது. காட்சியகப் பொறுப்பாளன் ஓவியங்களைப் பெரிதும் சிலாகிக்கிறான். பார்வையற்ற ஓவியன் தன் மனதின் இருண்ட படிமங்களை இதைவிட எப்படி வெளிப்படுத்தமுடியும் என்று காயத்ரியிடம் கூறி ‘இக்கண்காட்சி மிகப்பெரிய வெற்றியடையும் என மகிழ்கிறான். மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காகத் தயாராகும் மைக்கேலிடம் அதைத் தவிர்க்கச் சொல்கிறாள் காயத்ரி. உன்னால் அநாவசியமான கேள்விகளை எதிர்கொள்ள முடியாது என்கிறாள். மைக்கேல் உற்சாகமாக இருக்கிறான்.

பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திற்கு நேரமாகிவிட்டதை பொறுப்பாளன் சொல்லி.. காயத்ரியிடம் மைக்கேலை அழைத்து வரச் சொல்கிறான். காயத்ரி கலக்கத்துடன் செல்கிறாள். அங்கே உண்மை முழுவதையும் உணர்ந்தவனாய் மைக்கேல் அமர்ந்திருக்கிறான். இந்தக்கண்காட்சியே ஒரு நகைச்சுவை என்கிறான். காயத்ரியின் சமாதானங்களை அவன் ஏற்கத் தயாராக இல்லை. பொறுமையிழந்த பொறுப்பாளன் அங்கு வருகிறான். காயத்ரி வருந்தி அழைக்கிறாள். மைக்கேல் பொறுப்பாளனிடம் உன்னோடு வருகிறேன் என்று அவன் கையைப் பற்றியபடி செல்கிறான்.

 
பல்வேறு பாராட்டுக்களை, கேள்விகளை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கும் மைக்கேல், வெறுமையை வெளிப்படுத்த கருப்புதானே உகந்தது நீலம் ஏன்? என்ற கேள்விக்கு மட்டும் பதிலிறுக்கிறான். நீலம் என்பது நேர்மையின்மையின் (Deception) நிறம். பொய்மையின்  நிறம். அதுதானே நம்மைச் சுற்றிலும் இருப்பது என்ற பதிலைக் கேட்டவாறு காயத்ரி அந்த இடத்தைக் கடக்கிறாள்.
ஓவவொரு வாழ்க்கையிலும் திரும்பி வர முடியாத இடமொன்று உண்டு. அப்போது அதைத்தவிர தேர்ந்தெடுப்பதற்கு  வேறு ஒன்றும் இருப்பதில்லை. அந்த உண்மையை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குட் பை மைக்கேல்.. குட் பை என்ற மனக்குரல் ஒலிக்க  காயத்ரி தன்வழியே செல்கிறாள்.

இப்படம் ஓவியங்களைப் பற்றி, வண்ணங்களைப் பற்றிப் பேசுவதன் வாயிலாகப் பார்வையாளர்களை ஓவியக் கலைஞனொருவனின் உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அதோடு காதலின் ஆழத்தையும் தொடுகிறது.

நடிப்பு, ஒலிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என்று எதுவுமே துருத்திக் கொண்டிராத ஒரு உணர்ச்சிமயமான சினிமா.

2010இல் ஆங்கிலத்தில் வெளிவந்த Paritosh Uttam எழுதிய ‘Dreams in Prussian Blue’ எனும் ஆங்கில நாவலின் தழுவலே இத்திரைப்படம். மும்பையை களமாகக் கொண்டிருந்த நாவலை திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டதாக மாற்றியிருக்கிறார் இயக்குநர்.

புதன், 30 ஏப்ரல், 2014

வெஜைனா மோனோலாகிஸ் (THE VAGINA MONOLOGUES): பேசும் பெண்குறிகள்







எப்போதும் சென்னை வந்து இறங்கியவுடன் இரண்டு ஆங்கிலச் செய்தித்தாள்களையாவது வாங்கிவிடுவது வழக்கம். செய்திகளுக்காக அல்ல. நகரில் ஏதாவது நல்லது கெட்டது நடக்கிறதா என்று பார்க்கத்தான். கண்காட்சிகள், இசைநிகழ்ச்சிகள் கண்ணில் தட்டுப்படும். வாய்ப்பிருந்தால் ஒருநடை பார்த்துவிட முயற்சிப்பதுண்டு. இந்த முறை ஒரு நாடகத்தைப் பற்றிய சின்ன செய்தி தென்பட்டது. தலைப்பு வேறு ஆர்வத்தைத் தூண்டியது. முதல் நாள் முழுவதும் வேலை மும்முரத்தில் நினைவில் கொள்ளமுடியவில்லை. மறுநாள் தற்செயலாக (மாஜி) நாடகக்காரரான நண்பர் சுபகுணராஜனைச்  சந்திக்க நேர்ந்தபோது நாடகம் பற்றிய நினைவு வந்தது. பிற்பகல் 3 மாலை 5, இரவு 7 என மூன்றுகாட்சிகள் என்பதால் 7 மணிக்குப் போகலாம் என முடிவு செய்தோம்

தமிழ்நாட்டில் நவீன, பின்நவீன இத்யாதி நாடகம் என்றால்  பதட்டப்படாமல் போகலாம். ஏனென்றால்  இந்தமாதிரி நாடகங்களைப் பார்ப்பவர்கள் மொத்தமே 300 பேர்தான் தேறுவார்கள். அதிலும் 250பேர் நடிகர்கள், இயக்குநர்கள். மீதமுள்ள 50பேர் நடிகர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள். அந்த நினைப்பில் 6:30க்கு அல்லயன்ஸ் பிரான்சே அரங்குக்குப் போய்ச் சேர்ந்தோம்.  'நீங்கள் ஏற்கனவே புக் செய்திருக்கிறீர்களா?' என்றபோதுதான் ஆகா இது வேறு சமாச்சாரம் என்று புரிந்தது. கொஞ்சம் ஆறுதலாக நீங்கள் வெயிட் பண்ணுங்கள் புக் செய்து வராமல் போனால் உங்களுக்குக் கிடைக்கும் என்றார் வரவேற்பில் இருந்தவர். அப்போதுதான் ஆன் லைனில் புக்செய்யவேண்டும் என்பதும் கட்டணம் 300 ரூபாய் என்பதும் தெரியவந்தது. மூன்றுநாட்கள் தினசரி 3காட்சிகள் என்பதும் இது கடைசிகாட்சி என்பதும் கூடுதல் தகவல்களாகத் தெரிய வந்தன. சில வராமல்போன நல்லவர்களின் புண்ணியத்தில் அரங்குக்குள் சென்று அமர்ந்தபோது அரங்கம் நிறைந்திருந்தது

பார்வையாளர்களுக்குள்ளிருந்து பேசிக்கொண்டே எட்டுப் பெண்கள், இருபதிலிருந்து நாற்பதுகளுக்குள். குறிப்பாக எதையும் உணர்த்தாத அவரவர்க்குப் பிடித்த அல்லது சௌகர்யமான உடைகளில்... ஏதோ ஷாப்பிங் போனவர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தமாதிரி... இந்த மாதிரி எவ்வளோவோ பாத்தாச்சும்மா...என்று மனக்குரலில் பேசி முடிப்பதற்குள் அதிர்ச்சி வைத்தியத்தை ஆரம்பித்தார்கள். எந்தவிதமான சோடனைகளுமற்ற அரங்கங்த்தில் ஆங்காங்கே அமர்ந்தபின் பெண்குறிகளின் தனிமொழிகளாக...குறியே மனமாகவும் உடலாகவும் மாறும் விந்தை நிகழத்தொடங்கியது.



 தன்னைவிட்டு பிற பெண்களைப் புணரும் கணவனைப் பற்றிப் பேசும் நடுத்தரவயதுப் பெண்...தன் காதலனுடனான முதல் அனுபவத்தை விவரிக்கும் ஒரு எழுபதுவயது மூதாட்டி.. அறியாவயதில் தந்தையின் நண்பரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதைச் சொல்லும் பெண்... பக்கத்துவீட்டு நடுத்தரவயதுப் பெண்ணால் ஒருபால் உறவுக்குள்ளாக்கப்பட்டவள்... தன் குறியின் அழகில் மயங்கிக் கிடந்த கணவனைப் பற்றிப் பேசும் பெண்...பாலியல் வல்லுறவுக்குள்ளான கிராமத்துப் பெண்......கடைசியாக தான்  ஒரு குழந்தையைப் பிரவித்ததை விவரிக்கும் பெண்...என்பதாக வடிவமைக்கப்பட்ட நாடகம்.

ஒவ்வொரு கதைக்குமிடையில் பார்வையாளர்களிடம் நேரடியான உரையாடலாக ஒருவர் கட்டியங்காரன் பாணியில் உரையாடி நாடகத்திற்கான ஒரு அரசியல் சங்கிலியை இணைத்துச் செல்கிறார். தொடக்கத்தில் பெண்குறியைப் பற்றிய விதவிதமான படிமங்களைப் பேசிச் செல்கிறார் ஒருவர். அடுத்ததாக பெண்குறி பற்றி உலகின் பல மொழி வார்த்தைகள், பலபகுதிகளில் கேலியாக, வக்கிரமாக, சங்கேதமாக எப்படியெல்லாம் உச்சரிக்கப்படுகின்றன என்பதை இன்னொருவர் சொல்லிச் செல்கிறார். உலகம் முழுவதும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறார் இன்னொருவர். போஸ்னியாவிலும் இன்னும்பல பகுதிகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் உடல் ரீதியான வன்முறைகள் விரிவாகப் பேசப் படுகின்றன. இன்னொருவர் புணர்தலின் போது பெண்களின் முனகல் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கும்போது... ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண், ஒரு பெங்காலிப் பெண், ஒரு கிறித்தவப் பெண், ஒரு மளையாளிப்பெண் என்பதாக நடித்துக்காட்டிய போது அரங்கம் அதிர்ந்து அடங்கியது.       . 

கடைசியாக ஒரு பிரசவத்தை விவரித்தலின் மூலமாக பெண்மையின் தாய்மையின் வலியை உணர்வையும் பேசிவிடுகிறது. அதற்காக முந்தைய காட்சிகளையெல்லாம் இதை நோக்கியதாக நகர்த்தி வந்ததாகவும் சொல்லமுடியாது. தாய்மையின் மகத்துவத்தைப் பேசுவதாகவும் எளிமைப் படுத்தமுடியாது. பெண்ணுறுப்பின் இன்பத்தை, வலியை, அவமதிப்பை, கொண்டாட்டத்தை பெண்களின் பார்வையில் சமரசமற்ற தொனியில் பேச முற்படுவதிலேயே இந்நாடகம் தனித்து நிற்கிறது.

 

மூலப்பிரதியைப் போதுமான அளவிற்கு இந்தியப் படுத்தியிருப்பது பார்வையாளர்களோடு கூடுதலான தொடர்பை உண்டாக்குகிறது. ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்தை இந்திய மொழிகள் எதிலும் குறிப்பாக தமிழில் மொழிபெயர்ப்பதற்கோ நிகழ்த்துவதர்க்கோ சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நாடத்தின் பிரதியை அரங்கத்தில் நிகழ்த்துவாதென்பது இந்தியச் சூழலில் எளிதான கற்பனையல்ல. அந்த வகையில் பெங்களூர் ‘குரைக்கும் நாய்கள்’ குழுவினர் அசாத்தியமான அரசியல் தெளிவுடனேயே இந்நாடகத்தை நிகழ்த்திவருகிறார்கள் என்பதை அவர்களின் ஈடுபாடும் நிகழ்த்துமுறையும் உணர்த்தியது. முழுக்க தனிமொழியாகவே (monologue) நிகழ்த்தப்படும் இந்நாடகத்தில் நடிகர்களாக மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தார்கள். பேசத் தயங்குகிற, பேச இயலாத எந்த ஒரு விசயத்தையும் ஒரு கலைவடிவத்தால் கையாள முடியும் என்பதற்கு இந்நாடகம் ஒரு உதாரணம்.


இந்நாடகத்தின் மூல ஆசிரியர் பற்றி இணையத்தில் தேடியபோது... ஈவா என்ஸ்லர் (Eva Enslar) எனும் அமெரிக்க பெண்ணிய நாடகாசிரியர், செயல்பாட்டாளர் 1996இல் எழுதிய இந்நாடகம் 48 மொழிகளில் பெயர்க்கப்பட்டு 140 நாடுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறதுஓப்ரா வின்ஃபிரே, உஃபி கோல்ட்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்நாடகத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கில் பிறந்த ஈவா சிறுவயதில் தன்னுடைய 5 லிருந்து 10வயதுகாலகட்டத்தில் தந்தையால் வன்முறைக்கும் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டமையை தன்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் ‘வி-டே’ (V-Day) எனும் அமைப்பு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளைக் களைய செயல்படுமொரு அமைப்பாகும். வி- எனும் எழுத்து Victory, Valentine மற்றும் Vagina வைக் குறித்து நிற்கிறது. 2002இல் விஜினல் மோனோலாகிஸ் திரைப்படமாகவும் வந்ததாகவும் தெரிகிறது. படம் பார்க்கக் கிடைக்கவில்லை.


பெங்களூரைச் சார்ந்த 'குரைக்கும் நாய்கள்' (Barking Dods ) குழுவினர் பற்றி அறிய முற்பட்டபோது, அவர்கள் 2011லிருந்து பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் குழு என்று தெரிகிறது. சினிமா, ஃபாஷன், புகைப்படம், விளம்பரம் என பலதுறைகளைச் சார்ந்தவர்களும் சேர்ந்து இயங்கும் இக்குழுவினர் 70திற்கும் மேற்பட்ட நிகழ்த்துதல்களைச் செய்திருக்கிறார்கள். தொடர்ந்த அவர்களின் செயல்பாடுகளும் எதிர்கால திட்டங்களும் நம்பிக்கையளிக்கக்கூடியவை.



தமிழ்நாட்டில் 80களில் ஒரு பாய்ச்சலாகத் தொடங்கிய நவீன நாடக அலை 90களைத் தாண்டுவதற்குள்ளாகவே ஓய்ந்து குளம் போல் தேங்கிவிட்டது. துர்கிர அவலம், ஸ்பார்டக்கஸ், ஊர்வலம், சூரியனின் முதல் கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை, பல்லக்குத் தூக்கிகள் என்று தமிழில் பார்த்த நல்ல நாடகங்கள் நினைவில் வந்து போகின்றன. மதுரை, சென்னை, திருச்சி என்று நடந்த நாடகவிழாக்கள் தூரத்து நினைவுகளாக மாறிவிட்டன.  என்ன செய்ய.. கலைவறட்சிமிக்க ஒரு மாநிலத்தில் வாழநேர்கிற அவலத்தை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர?

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.